தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100% வரை திரும்ப பெறுவது—ஒருங்கிணைந்த ஒப்புதல்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(ஈபிஎப்ஓ) அமைப்பின் மத்திய அறங் காவலர்கள் குழு கூட்டம் ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் வு பகுதி தாராளமயமாக்கப் பட்ட பகுதி நேர திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல புரட்சிகரமான முடிவுகள் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தகுதியான நிலுவை தொகையில் 100% வரை திரும்ப பெற முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) உள்ள உறுப்பினர்களின் வாழ்வமைப்பை மேம்படுத்துவதற்காக பிஎப் திட்டத்தில் இருந்து பகுதி பணம் எடுப்பதற்கான விதிகளை எளிமைப்படுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மிக சிக்கலான 13 விதிகளை ஒன்றிணைத்து, அத்தியாவசிய தேவைகளாக வீடு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்றவற்றிற்காக எளிய, ஒருங்கிணைந்த விதியாக மாற்றப்பட்டுள்ளது. இனி, உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதியில் உள்ள தகுதியான இருப்புத் தொகையில் 100% வரை திரும்பப் பெற முடியும். இதில் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்கும் அடங்கும்.
பணம் எடுப்பதற்கான வரம்புகள் தாராளமயமாக்கப்பட்டன. திருமணம் மற்றும் கல்விக்காக பகுதி பணம் எடுக்க மொத்தம் 3 முறை அனுமதிக்கப்பட்டிருந்தது; இனி கல்விக்காக 10 முறை வரை, திருமணத்திற்கு 5 முறை வரையிலும் பணம் எடுக்க முடியும்.
அனைத்து பகுதி திரும்பப் பெறுதல்களுக்கும் குறைந்தபட்ச சேவைக் கால தேவை 12 மாதங்கள் மட்டுமே என ஒரே மாதிரியாகக் குறைக்கப்பட்டது. முன்பு, பகுதி பணத்தை திரும்பப் பெறுவதற்கு இயற்கை பேரிடர், நிறுவனங்கள் கதவடைப்பு, தொடர்ச்சியான வேலையின்மை, தொற்றுநோய் பரவல் போன்ற காரணங்களை உறுப்பினர் குறிப்பிட வேண்டியிருந்தது; இனி, உறுப்பினர் இப்பிரிவின் கீழ் எந்த காரணங்களையும் சொல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
உறுப்பினர்களின் கணக்கில் செலுத்தப்படும் பங்களிப்புகளில் 25%வை உறுப்பினர் எப்போதும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பாக வைத்திருப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறுவதை தாராளமயமாக்குவது, உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பு அல்லது ஓய்வூதிய உரிமைகளை சமரசம் செய்யாமல் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது.