சினிமாவை பார்த்து மாணவர்கள் ரவுடிகளாக மாறுகின்றனர்
திருவனந்தபுரம், மார்ச் 4: பள்ளி மாணவர்கள் வன்முறைக் காட்சிகள் நிறைந்த சினிமாக்களை பார்த்து ரவுடிகளாக மாறுவதாக கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்தார்.
கோழிக்கோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இது வன்முறைக்கு வழிவகுக்கிறது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா சட்டசபையில் கூறினார்.
முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்கையில், சமீபத்திய சில படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் மாணவர்கள் ரவுடி கும்பல்களில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றார். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கேரள அரசு போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 87,702 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.