அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள்
மேயர் வழங்கினார்
சென்னை, ஜூன் 20: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கராத்தே பயிற்சி பெறும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயர் ஆர். பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினார்.
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் திட்டத்தை மேயர் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பள்ளியிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கராத்தே பயிற்சி பெறும் மாணவிகளுக்கு முதற்கட்டமாக புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெரு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 21 மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு சென்னை ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேயர் ஆர். பிரியாவுடன் துணை மேயர் மு. மகேஷ்குமார், மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) ஜெ. விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த. விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மீதமுள்ள மாணவிகளுக்கு சீருடைகள் பள்ளி வாரியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.