பள்ளிகளில் ஜாதி மோதலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
மாணவர்களின் ஜாதியை குறிப்பிடக்கூடாது, வருகைப் பதிவேட்டில் ஜாதி தொடர்பான விவரங்கள் இடம் பெறக்கூடாது என பல அம்சங்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:
மாணவர்களிடையே ஜாதி மற்றும் சமூக வேறுபாடு அடிப்படையில் வன்முறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை. நல்லிணக்கம், நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்.
6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக திருக்குறளை மையமாகக் கொண்ட நன்னெறி வகுப்புகள் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் இலக்கியம், வினாடி வினா, நூலகம், வானவில் மன்றம் போன்றவற்றிலும் நாடகம், இசை, நடனம் போன்ற கல்வி சாரா செயல்பாடுகளிலும் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
வகுப்பறையில் மாணவர்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை வரிசை மாற்றி அமரவைக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் ஜாதி விவரங்கள் இடம் பெறக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் ஜாதியை குறிப்பிடக்கூடாது, கருத்து தெரிவிக்க கூடாது.
உதவித்தொகை விவரங்களை வகுப்பறையில் அறிவிக்க கூடாது. மாணவர்கள் வண்ணக்கயிறு, மோதிரம் போன்றவை அணிய தடை செய்யப்பட்டுள்ளது.
போதைப் பழக்கத்திற்கு ஆளான மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க பெற்றோர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும். இதில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர்-ஆசிரியர் குழு உறுப்பினர்கள், 1 எஸ்.எம்.சி உறுப்பினர், 1 பணியாளர் இடம்பெற வேண்டும்.
மகிழ் முற்றம் குழுக்கள் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து அமைக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி பள்ளிகளில் ஜாதி மோதல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.