அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல் திட்டம்' விரைவில் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஓசூரில் தமிழ்நாடு உருது தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதிசெய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும். கேரளத்தில் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி மாணவர்களின் நலனில் அரசு அக்கறை செலுத்தி வருகிறது.
அதேநேரத்தில், வாட்டர் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் என்றார்.
ஆசிரியர் பணியிடம் நிரப்பு மற்றும் போக்ஸோ வழக்குகள்
தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அடைவு தேர்வு குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் காலியாக உள்ள 2346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஜூலை மாதம் நிரப்பப்படும். போக்ஸோ வழக்குகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றம் உறுதிசெய்யப்பட்டால் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.