யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 20: குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், தமிழக அரசின் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:
குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இப்போது, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வு எழுத உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்தத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்தத் திட்டம் 2023-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நான் முதல்வன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.