பி.எட்., முதுநிலை மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பப் பதிவு
அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 20: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025–26 கல்வியாண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை மற்றும் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுக்கான சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 20 அன்று தொடங்கியது.
இந்த நிகழ்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் தெரிவித்ததாவது:
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 20 முதல் ஜூலை 9 வரை www.ingasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தரவரிசைப் பட்டியல் ஜூலை 18 அன்று வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25 வரை மாணவர்கள் விருப்பக்கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். ஜூலை 28 அன்று சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணவர்கள் www.iwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
முதுநிலை படிப்பு: 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 20 அன்று தொடங்கியது. விண்ணப்பக் கடைசி நாள் ஜூலை 15. தரவரிசைப் பட்டியல் ஜூலை 18 அன்று வெளியாகும்.
சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர்) ஜூலை 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். வகுப்புகள் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும்.
விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்கு கல்லூரிக் கல்வித் துறையின் நிதியாளர் மற்றும் பிற பணிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உயர் கல்வித் துறைச் செயலர் சி. சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வர் பா. உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.