தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு
உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் வெளியீடு
சென்னை, ஜூன் 28:
அரசு ஊழியர்களின் வாரிசுகள் உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது உத்தரவு விவரம்:
Akwa Academy
அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவரும் கல்வி உதவித் தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி,
- தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும்,
- கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ.50,000-ஆகவும் கல்வி முன்பணம் அதிகரிக்கப்பட்டது.
இந்தத் தொகையை நிகழ் கல்வியாண்டில் இருந்தே விண்ணப்பித்து பெறலாம்.
ஒரு குழந்தைக்கு மட்டுமே உதவி:
தமிழக அரசின் ஏ, பி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கல்வி முன்பணம் கிடைக்கும். அரசுப் பணிகளில் நிரந்தரமாக மற்றும் நிரந்தரம் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகள் முன்பணம் பெறத் தகுதி படைத்தவர்கள்.
- ஒரு குடும்பத்தில் கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவர் மட்டுமே முன்பணம் பெற முடியும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லூரிகளில் படித்தாலும் ஒரு குழந்தைக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
- முன்பணம் நிலுவையில் இருக்கும்போது மற்றொரு விண்ணப்பம் செய்ய முடியாது.
தொலைநிலைக் கல்விக்கு கிடையாது:
தொலைநிலைக் கல்வியில் பட்டப்படிப்புகளைப் படித்தால் முன்பணம் பெற முடியாது. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போர் தகுதி படைத்தவர்கள்.
இயன்முறை படிப்புகளை பட்டப் படிப்பாகவோ, பட்டயப் படிப்பாகவோ படிப்போருக்கு ரூ.50,000 முன்பணம் கிடைக்கும்.
பணி குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை:
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அல்லது கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் பெற முடியாது.
திருப்பிச் செலுத்தும் காலம்:
முன்பணமானது வட்டியில்லாத தொகையாக வழங்கப்படும். முன்பணம் பெறப்பட்ட தேதியில் இருந்து 10 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஊழியர்கள் பணியாற்றும் துறையின் தலைமையிலான அதிகாரிகள், தவணை அடிப்படையில் செலுத்தப்படும் தொகையை பதிவு செய்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.