அரசுப் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை, ஜூன் 28:
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதுதொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, கேரளத்தைப் போல தமிழகத்திலும் ‘வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சனிக்கிழமையன்று அனுப்பிய சுற்றறிக்கை:
Akwa Academy
பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல்' திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாக பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல நன்மைகளைத் தரும்.
இதையடுத்து, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல் திட்டம்' உடனே பள்ளிகளில் அமல்படுத்தப்பட வேண்டும் என பள்ளித் துறை அறிவுறுத்தியுள்ளது.
வாட்டர் பெல் திட்ட முக்கிய அம்சங்கள்:
- அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் திட்டம் அமல்.
- ஒவ்வொரு நாளும் 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும்:
- காலை 11:00 மணி
- மதியம் 1:00 மணி
- மாலை 3:00 மணி
- வாட்டர் பெல், வழக்கமான மணி ஒலியிலிருந்து மாறுபட்ட ஒலியில் இருக்க வேண்டும்.
- அந்த நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவர்.
- தொடர்புடைய பள்ளியின் இடைவேளை நேரங்களைப் பொருத்து நேர மாற்றம் செய்யலாம்.
செயல்முறை வழிகாட்டுதல்:
- தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் வகுப்பறைகளில் ஒதுக்கப்படும்.
- மாணவர்கள் வகுப்புகளுக்கு வெளியே செல்லக்கூடாது.
- வகுப்பறையிலேயே தண்ணீர் அருந்த வேண்டும்.
- மாணவர்கள் தாங்கள் வாட்டர் பாட்டில் கட்டாயமாக கொண்டுவர வேண்டும்.
- இதுபற்றி மாணவர்களுக்கு விளக்கமாக அறிவுறுத்தப்பட வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக செயல்படுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.